Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காகாபாளையம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே கனககிரி வேலாயுதசுவாமி கோவில் மலை அடிவாரத்தில் உள்ள சத்யா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது நிலத்தில் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் ( வயது 48) என்பவர் செருப்பு ரப்பரை கட்டிங் செய்யும் மிஷின் வைத்து தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழில் நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் (31) என்பவர் வட மாநிலத்தில் உள்ளவர்களை இங்கு வேலைக்கு அழைத்து வருவது வழக்கம். அவர்களுடன் நசுருதீனும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நசுருதீன் அங்கு பணிபுரிபவர்களிடம் வேலையை சரியாக செய்யுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சக தொழிலாளர்கள் ஜெயகுமார், அமித்ஷா ஆகியோர் கடும் ஆத்திரமடைந்தனர். நள்ளிரவில் வேலை பார்க்கும் இடத்திற்கு அவர்கள் குடிபோதையில் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த நசுருதீனை 2 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் சங்ககிரி டி.எஸ்.பி. ரமேஷ், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் அங்கு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அப்போது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நசுருதீன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார், வழக்குபதிவு செய்து ஜெயக்குமார், அமித்ஷா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.